அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியிருப்பதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்து. சென்னையில், ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவ மழை தொடங்கியதை அடுத்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில், பெய்த கனமழையால் நட்சத்திர ஏரி நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. தேனி மாவட்டம் போடிமெட்டு மலைச்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நல்லதங்காள் ஓடை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால் அணை ஒட்டிய பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் மூன்றாவது நாளாக குளிக்க தடைவிதிக்கப்பட்டது.
புதுச்சேரியில், தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தடுப்பணை உடைந்ததால் தண்ணீர் வீணாகுவது மட்டுமில்லாமல், ஆற்றை கடக்க முடியாமல் 10 கிராமங்களை சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் குமுளி, தேக்கடி உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து மழை பெய்ததால் முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் 127.40 அடியாக உயர்ந்துள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகத்திற்குப் பாசனத்திற்காக ஆயிரத்து 400 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment