newsariyalur@gmail.com

உங்கள் பகுதி முக்கிய செய்திகளை எங்களது ஈமெயில் newsariyalur@gmail.com க்கு புகைப்படத்துடன் அனுப்புங்கள். செய்திகள் உடனுக்குடன்...

NEWS IN ARIYALUR

Friday 17 October 2014

போலீசார் அறிவிப்பு-விபத்தில்லாமல் பட்டாசு வெடிக்கும் விதிமுறைகள்


சென்னை:-சென்னையில் விபத்தில்லாமல் பட்டாசு வெடிக்கும் விதிமுறைகள் பற்றி போலீசார் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். அந்த அறிவிப்பில் இரவு 10 மணிக்கு மேல் பட்டாசு வெடிக்கக்கூடாது என்று தடை விதித்துள்ளனர். இதுதொடர்பாக போலீசார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-


* உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி பட்டாசு வெடிக்கும் நேரம் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு விதி 89-ன் படி வெடிக்கும் இடத்திலிருந்து 4 மீட்டருக்கு அப்பால் 125 டெசிபல் அளவுக்குமேல் ஒளி எழுப்பக்கூடிய பட்டாசுகளை தயாரிக்கவோ, பயன்படுத்தவோ, விற்கவோ கூடாது.


* பட்டாசுகளை எளிதில் தீப்பிடிக்கும் பொருட்கள் உள்ள இடத்தில் வெடிக்க வேண்டாம். வாகனங்கள் நிறுத்தி வைத்திருக்கும் இடங்களின் அருகேயும், பெட்ரோல் சேமித்து வைத்திருக்கும் இடங்களின் அருகேயும், பெட்ரோல் நிலையங்கள் அருகேயும் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

* பட்டாசுகளை கொளுத்தி மேலே தூக்கி எறிந்துவிட்டு வேடிக்கை பார்க்க முயற்சித்தால், வெடிக்கும் பட்டாசுகள் அருகில் இருப்பவர்கள் மீது விழுந்து உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்.

* மக்கள் நடமாடும் இடத்தில் கவனக்குறைவாக பட்டாசுகளை வெடிக்க கூடாது.

* பட்டாசுகளை வெடிக்கும் போது தகர டப்பாக்களை போட்டு மூடி வேடிக்கை பார்த்தால், வெடியினால் டப்பாக்கள் தூக்கி வீசப்படலாம். அதனால் விபத்துகள் நேர வாய்ப்புள்ளது.

* குடிசை பகுதிகளிலும், மாடிக்கட்டிடங்கள் அருகிலும், ராக்கெட் போன்ற வெடிகளை வெடிக்கக்கூடாது.

* எரியும் விளக்கு அருகில் பட்டாசுகளை வெடிக்கக்கூடாது.

* ஈரமுள்ள பட்டாசுகளை அடுப்படியில் (சமையலறையில்) வைத்து உலர்த்தக்கூடாது.

* பெரியவர்கள் பாதுகாப்பின்றி குழந்தைகள் தனியாக பட்டாசு வெடிகளை கொளுத்த அனுமதிக்கக்கூடாது.

* எந்த காரணத்தை கொண்டும் குடிசைகளின் பக்கத்திலோ, ஓலைக்கூரைகள் உள்ள இடங்கள் அருகிலோ வாணவெடிகளை அல்லது பட்டாசுகளை கொளுத்துவதை தவிர்க்க வேண்டும்.

* பட்டாசு விற்கும் கடைகள் அருகில் சென்று புகை பிடிப்பதோ, சிகரெட் துண்டுகளை அஜாக்கிரதையாக வீசி எறிவதோ கூடாது.

* பட்டாசு விற்கும் கடைகள் அருகே சென்று விளம்பரத்துக்காகவோ, போட்டிக்காகவோ பட்டாசுகள் வெடிக்கக்கூடாது.

* பட்டாசு விற்பனையாளர்கள் எக்காரணத்தை முன்னிட்டும் மெழுகுவர்த்தியையோ, பெட்ரோமாக்ஸ் அல்லது சிம்னி விளக்கையோ கடை அருகில் அல்லது கடையிலோ உபயோகிக்கக்கூடாது.

* பட்டாசுகளை போதுமான இடைவெளி விட்டு கொளுத்த வேண்டும்.

* கால்நடைகள் அருகில் பட்டாசுகளை வெடித்தல் கூடாது. ஏனெனில் அவை பயத்தின் காரணமாக மிரண்டு ஓடும்போது, வாகன ஓட்டுனர்கள் மீது மோதி விபத்து ஏற்படலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment